×

மரபுவழி மற்றும் நவீன பாணி ஓவிய, சிற்ப கலைஞர்கள் கலைச்செம்மல் விருதுக்கு விண்ணப்பிக்கலாம்: தமிழக அரசு அறிவிப்பு

சென்னை: மரபுவழி மற்றும் நவீன பாணி ஓவிய, சிற்ப கலைஞர்கள் கலைச்செம்மல் விருதுக்கு விண்ணப்பிக்கலாம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. இதுகுறித்து கலை பண்பாட்டு துறை இயக்குநர் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழ்நாடு அரசு கலை பண்பாட்டு துறை வாயிலாக, தமிழ்நாட்டை சேர்ந்த மரபுவழி கலை வல்லுநர்களுக்கும், நவீன பாணி கலை வல்லுநர்களுக்கும் நுண்கலை துறையில் செய்துள்ள சாதனைகளையும், சேவைகளையும் பாராட்டும் வகையில் ஆண்டுக்கு 6 கலைஞர்களுக்கு கலைச்செம்மல் என்னும் விருதும், தலா ரூ.1 லட்சம் பரிசு தொகையும் வழங்கி வருகிறது.

50 வயதுக்கு மேற்பட்ட மரபுவழி மற்றும் நவீன பாணி ஓவிய, சிற்ப கலைஞர்களிடம் இருந்து கலைச்செம்மல் விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. அதற்கான தகுதிகள்:

* படைப்பாளர்கள் விண்ணப்பம் செய்யலாம் அல்லது கலை அமைப்புகளோ, அரசு நிறுவனமோ, தனி நபர்களோ தகுதி வாய்ந்த கலைஞர்களை பரிந்துரைக்கலாம்.

* விண்ணப்பிக்கும் படைப்பாளர் நவீன பாணி அல்லது மரபுவழி பிரிவில் ஏதேனும் ஒரு பிரிவில் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.

* படைப்பாளிகளின் வெவ்வேறு காலக்கட்டத்தை சேர்ந்த குறிப்பிடத்தக்க 20 கலை படைப்புகளின் வண்ண ஒளிப்படங்கள் (A4 Size – Colour Photo) இணைத்தல் வேண்டும்.

* பத்திரிகையில் வெளிவந்த செய்திக்குறிப்புகள், கலை சார்ந்து வெளியிடப்பட்ட கட்டுரைகள், புத்தகங்கள், சான்றிதழ்கள் இணைத்திருக்க வேண்டும்.

* மாநில, தேசிய, உலக அளவில், தனியார் அமைப்புகள் நடத்திய கலைக்காட்சிகளில் படைப்பாளரின் கலை படைப்புகள் இடம் பெற்றிருத்தல் வேண்டும்.

* புகைப்படத்துடன் கூடிய முழு தன் விவரக்குறிப்பு இடம் பெறுதல் வேண்டும். ஆணையர், கலை பண்பாட்டு துறை, தமிழ் வளர்ச்சி வளாகம், இரண்டாம் தளம், தமிழ்ச்சாலை, எழும்பூர், சென்னை – 8 என்ற முகவரியில் வருகிற 20ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். தொலைபேசி: 044-28193157.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

The post மரபுவழி மற்றும் நவீன பாணி ஓவிய, சிற்ப கலைஞர்கள் கலைச்செம்மல் விருதுக்கு விண்ணப்பிக்கலாம்: தமிழக அரசு அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu Government ,Chennai ,Art and Culture Department ,Tamil Nadu Government Art and Culture Department ,Tamil Nadu ,
× RELATED தமிழ்நாடு அரசு அறிவிப்பு: அனைத்து அரசு பள்ளிகளிலும் இணையதள வசதி அறிமுகம்